அமீர்பாளையத்தில் வாருகால் அமைக்க கோரிக்கை
சாத்தூரில் உள்ள அமீர்பாளையத்தில் குடியிருப்பு அருகே 3 ஆண்டுகளாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, வாருகால் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாத்தூரில் உள்ள அமீர்பாளையத்தில் குடியிருப்பு அருகே 3 ஆண்டுகளாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி, வாருகால் அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியம், சத்திரபட்டி ஊராட்சிக்குள்பட்டது அமீர்பாளையத்தில் கருப்பசாமி கோயில் தெரு, நம்பிராஜபுரம், ஏஜி சபை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1,500 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இந்த பகுதியில் வாருகால் இல்லாததால், சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்பு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால், இந்தப் பகுதியில் பல்வேறு தொற்று நோய்கள் பரவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், கழிவுநீரை அகற்றி வாருகால் அமைக்கக் கோரி பலமுறை மனு கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இப்பகுதியில் உடனடியாக வாருகால் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.