அருப்புக்கோட்டையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை திறக்க கோரிக்கை
அருப்புக்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் 3 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
அருப்புக்கோட்டை நகராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் 3 மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை.
அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. தினந்தோறும் நகராட்சிப் பகுதி மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் குடிநீர்த் தேவை என்பதால், திருப்புவனம் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூலமும், தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமும் சுமார் 25 லட்சம் லிட்டர் குடிநீரே பெறப்பட்டு வந்தது. இதனால், குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது.
பின்னர், குடிநீர்ஆதாரங்களிலிருந்தும் அதிகளவில் தண்ணீர் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, பெறப்போகும் கூடுதல் நீருக்காக தலா 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் அமைக்கத் திட்டமிடப்பட்டன . அதன்படி, அருப்புக்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம், நகர் காவல் அலுவலகம், புளியம்பட்டி காந்தி திடல் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன.
ஆனால், இவை கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் பயன்பாட்டிக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை. இதனால், 2 வாரங்களுக்கு ஒரு முறை என குடிநீர் விநியோகிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, இந்த 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளையும் உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.