அருப்புக்கோட்டை-திருச்செந்தூர் இடையே கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டை நகரிலிருந்து தினமும் 300-க்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூருக்கு கோயிலில் வழிபாடு செய்வதற்கும், அலுவல் நிமித்தமாகவும் சென்று வருவாதகக் கூறப்படுகிறது.
முன்னர், மதுரையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் 20 நிமிடத்துக்கு ஒன்று என்ற கணக்கில் அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து சென்றன. இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்காமலும், காத்திருக்க வேண்டிய அவசியமின்றியும் வசதியுடன் சென்று வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மதுரை-திருச்செந்தூர் வழித்தடப் பேருந்துகள் அருப்புக்கோட்டை நகருக்குள் வராமல், புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடுகின்றன. இதனால், அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து மட்டுமே திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன.
இதில், சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை என ஏராளமான பயணிகள் உட்கார இடம் கிடைக்காமல் திருச்செந்தூர் வரை சுமார் மூன்றரை மணி நேரம் நின்றுகொண்டே செல்கின்றனர். எனவே, அருப்புக்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது மதுரையிலிருந்து வரும் பேருந்துகள் அருப்புக்கோட்டை நகருக்குள் வந்து செல்லும்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.