சிவகாசி அரசு கல்லூரியில் மரக் கன்றுகள் நடும் விழா
ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வளத் துறை அமைச்சர்
ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி புதன்கிழமை மரக்கன்று நடும் விழாவினை தொடக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசியதாவது: ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதி 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை, முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில், பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு வனத் துறை சார்பில், வளம் குன்றிய வனப் பகுதியில் 24 ஆயிரம் மரக்கன்றுகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 1,97,000 மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. அனைவரும் ஒருங்கிணைந்து மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம், மாவட்ட வன உயிரினக் காப்பாளர் அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் தினகரன், கோட்ட வன அலுவலர் மித்ரன் பாண்டியன், கல்லூரி முதல்வர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.