அருப்புக்கோட்டையில்5 நாள்களாக மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கிய நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள்
அருப்புக்கோட்டை பகுதியில் பெய்த மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 5 நாள்களாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.
அருப்புக்கோட்டை பகுதியில் பெய்த மழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 5 நாள்களாக மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.
அருப்புக்கோட்டை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் மழை பெய்து வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணிக்குத் தொடங்கிய மழை பலத்த காற்று,இடி மின்னலுடன் சுமார் 3 மணிநேரம் பெய்தது.
இதில் அருப்புக்கோட்டை நகரமே மின்சாரம் துண்டிக்கப்பட்டு சுமார் 6 மணிநேரம் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். மின்வாரியத்தினரின் நடவடிக்கைக்குப் பின்னர் மீண்டும் மின்விநியோகம் வந்தது.
இருந்த போதிலும் தெற்குத்தெரு,வெள்ளைக்கோட்டை ,சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பல பகுதிகளைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான வீடுகளிலும் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரிய வந்தது. மின்வாரியத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கடந்த ஐந்து நாள்களாக பல வீடுகளிலும் இன்னும் மின் இணைப்பு வழங்க இயலாத சூழல் உள்ளது. இதனால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
எனவே மின்வாரியத்தில் தொழிலாளர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்து மீண்டும் மின் விநியோகம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.