தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்: திருச்சி சிவா
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேட்டி
தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் அதுவரை மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
Advertisement
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,
"தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு 48 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தென்னகத்தை வஞ்சிக்கும் நோக்கில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை திமுக எதிர்க்கவில்லை. 2023 ஆம் ஆண்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது திமுக ஆதரித்தது. இப்போது தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இதனைக் கொண்டுவர அவசியம் என்ன? 48 மணி நேரத்துக்கு முன்னர்தான் மசோதாக்கள் பற்றிய செய்திகள் வெளியில் வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் என யாருக்கும் இதுபற்றி தெரியாது. 5 மாநிலத் தேர்தல் முடிந்து அவையை நடத்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள், என்ன காரணம் என்று தெரியவில்லை.
இது பாஜகவின் பாஜகவின் சூழ்ச்சிகளில் ஒன்று. திடீரென அறிவித்து செய்கிறார்கள். எல்லாவற்றையும் தந்திரமாக செய்து முடிக்க பாஜக நினைக்கிறது.
இந்த மசோதாக்களுக்கு 3ல் ஒரு பங்கு ஆதரவு வேண்டும். அது இருக்காது, மசோதாக்கள் நிறைவேறாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். தமிழ்நாட்டின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும்" என்றார்.