தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு
இரு மாநிலங்களின் தேர்தல்களுக்கிடையில் வேண்டுமென்றே நாடாளுமன்ற கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்துவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றச்சாட்டு
இரு மாநிலங்களின் தேர்தல்களுக்கிடையில் மத்திய அரசு வேண்டுமென்றே நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவதாக திமுக எம்.பி. திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசுகையில், "தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 தேதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆகையால், ஏப்ரல் 29-க்குப் பிறகு, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்துமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்தினோம்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களிலும் மொத்தம் 120 எம்.பி.க்கள் உள்ளனர். தேர்தல் காரணமாக, இந்த 120 எம்.பி.க்களும் பிரசாரத்துக்குச் செல்வதால், நாடாளுமன்ற அமர்விலிருந்து விலகியிருப்பார்கள்.
Advertisement
இந்தச் சமயத்தில் அவர்கள் (மத்திய அரசு) காத்திருக்கலாம். ஆனால், அவர்கள் வேண்டுமென்றே இதனைச் (நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்) செய்கின்றனர்" என்று தெரிவித்தார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் (அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தம்), கடந்த 2023-இல் நிறைவேற்றப்பட்டது. ‘நாரி சக்தி வந்தன்’ அதிநியம் எனும் இச்சட்டத்தின்கீழ் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகான மக்களவை, பேரவைத் தொகுதி மறுவரையறைப் பணிகளைத் தொடா்ந்து, மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வழிவகை செய்யப்பட்டது.
இந்தச் சூழலில், மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு முன்பே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் மற்றொரு திருத்தம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக, எதிா்க்கட்சித் தலைவா்களிடம் மத்திய அரசு அதிகாரபூா்வமற்ற முறையில் கருத்துகளைக் கேட்டுள்ளது.
இதுதொடா்பான மசோதாக்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்காகவே, இரு அவைகளையும் ஒத்திவைக்கப்படுவதற்குப் பதிலாக, வரும் 16-ஆம் தேதி மீண்டும் கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.