விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வாயில் கதவை முற்றுகையிட்ட அனைத் திந்திய இளைஞர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் அலுவலக வாயில் கதவை முற்றுகையிட்ட அனைத் திந்திய இளைஞர் பெருமன்றத்தினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி, சிபிஐ மாநில குழு உறுப்பினர் செந்தில்குமார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தினேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதில், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தமிழக ஆளுநர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இயற்கை வளங்களை அழித்து, தமிழகத்தை பாலைவனமாக்கும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வாயில் கதவை முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர்.
அப்போது, அவர்களை போலீஸார் தடுத்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 72 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர், மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.