ம.ரெட்டியபட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில் விவசாயிகளுக்கான விதை உற்பத்திப் பயிற்சி திருச்சுழி தனியார் தொண்டு நிறுவன அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சோ.துரைக்கண்ணம்மாள் தலைமை வகித்தார்.
விருதுநகர் விதைச் சான்றளிப்புத் துறை வேளாண்மை உதவி இயக்குநர் க.உமா முன்னிலை வகித்தார். மேலும் விவசாயிகளுக்கு விதைச் சட்டம் மற்றும் விதை ரகங்கள் பற்றி விரிவாக விளக்கமளித்தார். விதை அலுவலர் வானமாமலை விதைத் தேர்வு, ஆதார விதை, சான்று விதைகள், உற்பத்தி முறைகள், விதை நேர்த்தி, பயிர் இடைவெளி தூரம், பயிர்ப் பாதுகாப்பு, களவான் நீக்கம், அறுவடை குறித்து விளக்கினார்.
இதைத் தொடர்ந்து கத்தாளம்பட்டியைச் சேர்ந்த பாசிப்பயறு விவசாயி பாக்கியராஜ் உற்பத்தியின்போது 2 சதவீதம் டிஏபி தெளித்தல், நுண்ணூட்டச்சத்து குறித்து விளக்கினார். சித்தலக்குண்டு விதைப் பண்ணை விவசாயி இரா.பிச்சை இதன் மூலம் கிடைக்கும் வருவாய் பற்றி எடுத்துரைத்தார்.
இதில் மேலேந்தல், சித்தலக்குண்டு, பாறைக்குளம், நல்லதரை, திருச்சுழி மற்றும் கத்தாளம்பட்டி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவித் தொழில் நுட்ப மேலாளர்கள் ரா.வீரபாண்டி,யோகப்பிரியா ஆகியோர் செய்திருந்தனர்.