விருதுநகர் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கோட்ட வர்த்தக மூத்த மேலாளர் ஹரிகிருஷ்ணா தொடங்கி வைத்தார்.
ஹாஜி பி செய்யது முகம்மது மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்று, தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரயில் பயணிகளுக்கு வழங்கினர்.
மேலும், ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். அதில், ரயில் நிலையங்களில் ரயில் நிற்கும்போது கழிப்பறையை பயன்படுத்துவதை பயணிகள் தவிர்க்க வேண்டும்.
நடைமேடையில் எச்சில் துப்பக் கூடாது, சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை அதற்கான தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும், கண்ட இடங்களில் வீசக் கூடாது போன்றவை குறித்து வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் சிவகுருநாதன், ரயில்வே அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.