விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே திங்கள்கிழமை கதிரறுக்கும் டிராக்டர் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி (70). விவசாயியான இவர் கதிரறுக்கும் டிராக்டரை வாடைகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார்.
இந்நிலையில் பரளச்சி அருகே உள்ள பெருநாழி கிராமத்தில் விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக தனது கதிரறுக்கும் டிராக்டரை திங்கள்கிழமை காலையில் எடுத்துச் சென்று பணிகளை முடித்து விட்டு மீண்டும் தனது கிராமமான கஞ்சநாயக்கன்பட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். டிராக்டரை தனுஷ்கோடியே ஓட்டி வந்துள்ளார்.
பரளச்சி அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோர வயல்வெளியில் டிராக்டர் கவிழ்ந்தது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த தனுஷ்கோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக பரளச்சி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.