விருதுநகரில் ரயில்வே ஓய்வூதியர் சங்க 8-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே மேலாளர் ராமசாமி தலைமை வகித்தார். இதில், மத்திய ரயில்வே ஓய்வூதியர் சங்க இணை பொது செயலாளர் எஸ்.பி. சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியது:
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள கமிஷனில் அறிவிக்கப்பட்ட 3 சதவீதத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதந்தோறும் மருத்துவப் படி ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ரயில்வே சார்பில் அலுவலகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் ரயில்வே ஓய்வூதியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். முடிவில், விருதுநகர் கிளை துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.