சென்னை தனியார் கல்லூரி மீது பாஜகவினர் புகார்
இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கண்காட்சி நடத்தியதாகக் கூறி, சென்னை தனியார் கல்லூரி நிர்வாகம்
இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கண்காட்சி நடத்தியதாகக் கூறி, சென்னை தனியார் கல்லூரி நிர்வாகம், அதில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி, அமைச்சர் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை பாஜகவினர் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் கடந்த 19 ஆம் தேதி வீதி விருது விழா நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதில், இந்து மதத்தையும், கடவுள்களையும், பெண்ணியத்தையும் களங்கப்படுத்தும் விதமாக கண்காட்சியில் ஓவியம் வைத்துள்ளனர். மேலும், இந்திய இறையான்மைக்கு எதிராகவும் பிரதமர் நரேந்திரமோடி மீது அவதூறு பரப்பியும் கண்காட்சி நடத்தியுள்ளனர்.
எனவே, இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், நிறைவு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.