முகப்பு
விருதுநகர்

மழை, வெயிலால் அவதி: அருப்புக்கோட்டை அருகே  காந்திநகரில் பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் அதிக மக்கள் புழக்கமுள்ள காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில்

Updated On : 23 ஜனவரி 2019, 7:45 am IST
பகிர்:

அருப்புக்கோட்டை வட்டம் கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் அதிக மக்கள் புழக்கமுள்ள காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
  கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 5000-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அளவில் பெரிய  இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அருப்புக்கோட்டை நகருக்குப் பல்வேறு அலுவல்கள் காரணமாக நாள்தோறும்  சென்றுவருவதால் இங்குள்ள காந்திநகர் பிரதானச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்துதான் பேருந்துகளைப் பிடிக்கவேண்டும். ஆனால் ஆரம்பம் முதலே இப்பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தரப்படவில்லை. இதனால் பேருந்திற்காகக் காத்திருக்கும் வேளையில் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்க இடமில்லாது பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், முதியோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும்  பலவித சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதுதொடர்பாக இப்பகுதிவாசியான  சுப்புராஜ் (47) என்பவர் கூறியதாவது: கஞ்சநாயக்கன்பட்டியின் முக்கியப்பேருந்து நிறுத்தமான இங்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை. ஆனால் பேருந்து போக்குவரத்து மிகமிகக் குறைவாக உள்ள கஞ்சநாக்கன்பட்டியின் மேற்குப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் சமீபத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இவ்விதம் பாகுபாடு காட்டாமல் காந்திநகர் பேருந்து நிறுத்தத்திலும்  நிழற்குடை அமைக்கவேண்டுமென  பொதுமக்கள் பலமுறை கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சித் தரப்பிற்குக் கோரிக்கை வைத்துவிட்டனர். ஆனால் உரிய நடவடிக்கை ஏதும் இல்லை, என தெரிவித்தார். ஆகவே அதிக மக்கள் போக்குவரத்து உள்ள காந்தி நகர் பேருந்து நிறுத்தத்தில் விரைவில் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர வேண்டுமெனப் பொதுமக்கள் மீண்டும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.