முகப்பு
விருதுநகர்

விருதுநகரில் குடிநீர் குழாய் உடைப்பை சீரமைக்கக் கோரிக்கை

விருதுநகர் - சிவகாசி சாலையில் உள்ள முத்துராமலிங்க நகரில் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாக

Updated On : 24 ஜனவரி 2019, 12:51 am IST
பகிர்:

விருதுநகர் - சிவகாசி சாலையில் உள்ள முத்துராமலிங்க நகரில் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. இக்குழாயை சீரமைத்து பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள 36 வார்டுகளில் சுமார் 75 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நபர் ஒன்றுக்கு தினந்தோறும் 70 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். விருதுநகர் நகராட்சியில் குடியிருப்போருக்கு தாமிருவருணி, ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்திலிருந்து தினந்தோறும் சுமார் 45 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் விருதுநகரில் ஆங்காங்கே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏற்றி 10 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நீண்டநாள் இடைவெளிக்கு பின்னர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதால் பலர் தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிவகாசி செல்லும் சாலையில் முத்துராமலிங்க நகர் பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. மேலும், ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்திலிருந்து விருதுநகர் வரை பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீரமைக்காததால் தினந்தோறும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் வரை குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கெனவே முறையான குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் குடிநீர் குழாயிலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆணைக்குட்டம் நீர்த்தேக்கத்திலிருந்து விருதுநகர் வரை பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் எங்கெல்லாம் உடைப்பு ஏற்பட்டுள்ளதோ அதை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.