விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைத்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி அலுவலர்கள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. சுந்தரமகாலிங்கம் கோயில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்குள் அமைந்து இருப்பதால் வனத்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் மாதம் நான்கு நாள் மட்டுமே. அதாவது அமாவாசை மற்றும் பெளர்ணமி நாள்களை முன்னிட்டு அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் அங்கு சரியாக இல்லை எனக்கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பக்தர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து பதில் அளிக்க உத்தரவிட்டது. இதனால் அரசுத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் வனத்துறையினர் உதவியுடன் வனப்பகுதிக்குள் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுகாதாரத்துறையினர், மண்டல வனஉயிரின காப்பாளர், மாவட்ட வன உயிரின காப்பாளர், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கோயில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.