சாத்தூர் மேலகாந்திநகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் நகராட்சி சார்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பறை, குடிநீர், வாய்க்கால் வசதி போன்றவை செய்து தரப்பட்டன. ஆனால் நகராட்சி நிர்வாகம் சார்பில் முறையான பராமரிப்பு இல்லாததால் பொதுக்கழிப்பறைகள் யாரும் பயன்படுத்த முடியாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. மேலும் நகராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீரும் குறைவான நேரம் மட்டுமே விடப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதேபோல் கழிவுநீர் வாய்க்கால்கள், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர், சாக்கடை, சொத்து வரியை மட்டும் சரியாக வசூலித்து வரும் நகராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகளை செய்வதில் தயக்கம் காட்டி வருவதாக இப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி மேலகாந்திநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.