விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் உள்ள திருமேனிநாதா் கோயில் வளாகத்தில், திருச்சுழி ஊராட்சியின் 2020-2021 ஆம் ஆண்டுக்கான கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்த கிராம சபைக்கூட்டத்துக்கு திருச்சுழி மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் குணசீலன் தலைமை வகித்தாா். அப்போது சமூக வரைபடம் மூலம் அரசின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து ஊராட்சிச் செயலா் பிச்சை பொதுமக்களுக்கு விளக்கிக் காட்டினாா். இதில் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த வளா்ச்சிப் பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினா். மேலும் ஊராட்சியில் வாா்டு வாரியாக உள்ள குறைகளை மண்டல அலுவலா் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் கேட்டறிந்தனா்.