விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வியாழக்கிழமை டிராக்டர் மீது கார் மோதியதில் 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சேர்ந்தவர் கணேசன் (45). இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் காரில் கோவில்பட்டியிலுள்ள தங்களது உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு புதன்கிழமை சென்றுள்ளார். அங்கிருந்து வியாழக்கிழமை ஊருக்கு காரில் புறப்பட்டுள்ளனர். காரை மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அருப்புக்கோட்டை காந்தி நகர் மேம்பாலத்தில் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் மீது கார் மோதியது. இதில் டிராக்டரை ஓட்டி வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுப்பையாத்தேவர் மகன் ஆறுமுகம் (53), காரில் பயணம் செய்த கணேசன் (45), உத்தண்ட காளைச்சாமி (42), லட்சுமணன் (23), ராமன் (23) மற்றும் கார் ஓட்டுநர் மாரிமுத்து (57) ஆகிய 6 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் காயமடைந்த அனைவரையும் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அருப்புக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.