ஸ்ரீவில்லிபுத்தூர்: காட்டாற்று வெள்ளத்தில் இறந்தோரின் குடும்பத்திற்கு அரசுப் பணி
ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானவர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியானவர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி ஆணையை சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அருவிகள் நீரோடைகள் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்த காட்டாற்று வெள்ளத்தில் பேயனார் ஓடை பகுதியில் குளித்துக்கொண்டிருந்த கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி 22 கோபி 22, முத்தீஸ்வரன் 23 ஆகியோர் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.
பலியானவர்கள் குடும்பத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கினார். மேலும் வறுமையான சூழல் நிலவுவதால் தங்களுக்கு அரசு வேலை வேண்டும் என முத்தீஸ்வரன் மனைவி சிவரஞ்சனி சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையாவிடம் கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து சந்திரபிரபா முத்தையா முத்தீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டுமென தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதனை அடுத்து சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா பரிந்துரையை ஏற்று கருணை அடிப்படையில் முத்தீஸ்வரனின் மனைவி சிவரஞ்சனிக்கு மங்காபுரத்தில் அங்கன்வாடி உதவியாளர் பணி வழங்கப்பட்டது.
இதற்கான பணி ஆணையை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டபேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா முத்தீஸ்வரன் மனைவி சிவரஞ்சனி இடம் வழங்கினார்.