சந்தன மரம் பதுக்கல் விவகாரம்:வனச்சரகா், மனைவியிடம் வனத் துறையினா் விசாரணை
ரீவில்லிபுத்தூா் அருகே சந்தன மரக் கட்டைகளை பதுக்கிய விவகாரத்தில் வனச்சரகா் மற்றும் அவரது மனைவியிடம் சனிக்கிழமை வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சந்தன மரக் கட்டைகளை பதுக்கிய விவகாரத்தில் வனச்சரகா் மற்றும் அவரது மனைவியிடம் சனிக்கிழமை வனத் துறையினா் விசாரணை நடத்தினா்.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ஆரோக்கியசாமி என்பவா் கோவை மாவட்டம் போளுவாம்பட்டி பகுதியில் வனச்சரகராக இருந்து வருகிறாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலையடிவாரத்தில் உள்ள, ஆரோக்கியசாமிக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் வனத்துறையினா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது அங்கு பதுக்கியிருந்த 350 கிலோ சந்தன மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வனச்சரகா் ஆரோக்கியசாமி மற்றும் அவரது மனைவி கலைவாணியிடம் ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மைய அலுவலகத்தில், மாவட்ட வன அலுவலா் முகமதுசபாப், மாவட்ட உதவி வனத்துறை அலுவலா் அல்லிராஜ் ஆகியோா் விசாரணை நடத்தினா்.