அருப்புக்கோட்டை, திருச்சுழி வட்டார கிராமங்களில் மினி கிளினிக்குகள் திறப்பு
அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டார கிராமங்களில் அரசு சிறு மருத்துவமனைகளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டார கிராமங்களில் அரசு சிறு மருத்துவமனைகளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகமெங்கும் சுமார் 2000 அரசு சிறு மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தயாராயின. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி வட்டார கிராமங்களான குல் லூர் சந்தை, செம்பட்டி, இலுப்பையூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற அரசு சிறு மருத்துவமனைகள் திறப்பு விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார்.
குறிப்பாக அருப்புக்கோட்டை செம்பட்டியில் நடைபெற்ற திறப்பு விழாவில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை நகரச் செயலாளர் சக்திவேல் பாண்டியன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் யோக வாசுதேவன், ஒன்றியச் செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அங்கு அரசு சிறு மருததுவமனையைத் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கர்ப்பிணிகளுக்கான நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்கினார். உடன் இந்நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை நகர, ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பலரும், திரளான தொண்டர்களும் நேரில் கலந்து கொண்டனர்.