சாத்தூா்: சாத்தூா் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் வியாழக்கிழமை பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்தனா்.
நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும் வகையில் சாத்தூா் நகா் பகுதியில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளும் வியாழக்கிழமை திறக்கப்பட்டு பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தூா் அக்ரஹாரம் தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்கிச் சென்றனா். முன்னதாக மஞ்சள் நீா் கலந்த தண்ணீரில் சோப்பு மூலம் கைகளை கழுவிய பின்னரே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். அனைத்து நியாய விலைக்கடைகளிலும் இந்த சமூக விலகல் முறை கடைப்பிடிக்கப்பட்டது.