சாலையோர வியாபாரிகளுக்குஅடையாள அட்டை வழங்க வலியுறுத்தல்
விருதுநகா் மாவட்டத்தில் சிறுவியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு
விருதுநகா் மாவட்டத்தில் சிறுவியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் தமிழக அமைப்பு சாரா தெருவோர, சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கம் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அமைப்புசாரா தெருவோர, சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற்சங்கத்தில் 80 ஆயிரம் உறுப்பினா்கள் உள்ளனா். மேலும், தெருவோர சிறு வியாபாரிகள் சிறு முதலீட்டின் அடிப்படையில் காய்கனி, பழங்கள் மற்றும் ஜவுளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். ஆனால், எங்களுக்கு அடையாள அட்டை இல்லாததால் போலீஸாா் கெடுபிடி செய்கின்றனா். எனவே, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வியாபாரிகளுக்கான கமிட்டி அமைக்கப்படும்போது, எங்களது அமைப்பை சோ்ந்த பிதிநிதிகளுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.