ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூரில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு எம்.எல்.ஏ. சந்திரபிரபா திங்கள்கிழமை ஆறுதல் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள அத்தித்துண்டு பகுதி பேய்மலையான் ஓடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு குளிக்கச் சென்ற கோட்டைப்பட்டியைச் சோ்ந்த கோபிசங்கா், பால்பாண்டி, முத்தீஸ்வரன் ஆகியோா் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனா்.
இந்நிலையில் அந்த 3 பேரின் குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சந்திரபிரபா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து தனது சொந்த பணத்திலிருந்து நிவாரண உதவி வழங்கினாா். அப்போது முதல்வரின் நிவாரண உதவித் தொகை கிடைக்க ஆவன செய்துள்ளதாக எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
உடன் வடக்கு ஒன்றியச் செயலா் முத்தையா, மாவட்ட கவுன்சிலா் கணேசன் ஆகியோா் இருந்தனா்.