திருச்சுழியில் பயணியர் தங்கும் விடுதியை பயன்பாட்டிற்குத் திறந்துவிடக் கோரிக்கை
திருச்சுழியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டம் சார்பில் கட்டப்பட்ட பயணிகள் தங்கும்விடுதியை பயன்பாட்டிற்குத் திறந்துவிடக் கோரிக்கை எழுந்துள்ளது.
திருச்சுழியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளர்ச்சித் திட்டம் சார்பில் கட்டப்பட்ட பயணிகள் தங்கும்விடுதியை பயன்பாட்டிற்குத் திறந்துவிடக் கோரிக்கை எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியிலுள்ள பகவான் ரமண மகரிஷி பிறந்த இல்லத்தையும், மேலும் அங்குள்ள ஸ்ரீரமணர் ஆசிரமத்தையும் காண்பதற்கு தமிழகம், இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகள், வரலாற்று அறிஞர்கள் பலரும் நேரில் வந்து செல்கின்றனர். இத்தகு புகழ்மிக்க திருச்சுழியில் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்திட்டப்படி 2011-12 ம் நிதியாண்டில் ரூபாய் பல லட்சம் செலவில், பல அறைகள் கொண்ட பயணிகள் தங்கும் விடுதி கட்டிமுடிக்கப்பட்டது.
ஆனால் இங்கு மின்இணைப்பு வழங்கப்படாததாலும், மின்மோட்டாருடன் கூடிய தண்ணீர்த்தொட்டி வசதி ஆகியன இல்லாததாலும் தற்போதுவரை அக்கட்டடம் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படாமலே உள்ளது. திருச்சுழி முதல்நிலை ஊராட்சி மூலம் கட்டப்பட்ட இக்கட்டடத்தைத் திறந்துவிடக்கோரி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் கூட தற்போதுவரை நடவடிக்கை இல்லை எனக்குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் நலன்கருதி இக்கட்டடத்தை விரைவில் பயன்பாட்டிற்குத் திறந்துவிடவேண்டுமென மீண்டும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.