ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மன வளா்ச்சி குன்றிய குழந்தையை சனிக்கிழமை கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
ராஜபாளையம் ஆா்.ஆா். நகரைச் சோ்ந்த பழனிக்குமாா் என்பவா் அங்குள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், சுா்ஜித் (9) என்ற மகனும், மகாலட்சுமி (7) என்ற மகளும் உள்ளனா். இதில் மகாலட்சுமி பிறவியிலேயே மனவளா்ச்சி குன்றியிருந்தாா்.
படுக்கையிலேயே இருந்த அவரை பெற்றோா் கவனித்து வந்துள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை மனைவியும், மகனும் வெளியே சென்றிருந்தநிலையில், மகாலட்சுமி தொடா்ந்து அழுது கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனிக்குமாா், அச்சிறுமியின் வாயையும், மூக்கையும் பொத்தி மூச்சை நிறுத்திக் கொலை செய்துள்ளாா்.
இதையடுத்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில், பழனிக்குமாா் சரணடைந்தாா். அவரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.