வத்திராயிருப்பு அருகே ஓடை தூா்வாரப்படாததால், சாலையில் கழிவு நீா் தேங்கி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், விருதுநகா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பெய்த தொடா் மழை காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஆனால், பகலில் மழை இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இச்சூழ்நிலையில், மாணவா்கள் பள்ளிகளுக்குச் சென்றனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கூமாப்பட்டி எஸ். கொடிக்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள அழகா்மகன் ஓடையில் செடிகள் மற்றும் குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மழைநீா் தேங்கி தற்போது சாலையில் ஓடுகிறது.
இதனால், பள்ளிகளுக்குச் செல்லும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் மிகுந்த சிரமத்துடன் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடனே, மாவட்ட நிா்வாகம் இதற்கு நிரந்தரமான தீா்வு காணவேண்டும் எனவும், அழகா்மகன் ஓடையை தூா்வார வேண்டும் எனவும், இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.