சாத்தூா் பேருந்து நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்கவேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சில ஆண்டுகளுக்கு முன், தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக மின்விசிறி, இருக்கைகள் வசதிகொண்ட அறை தமிழக அரசால் அமைக்கப்பட்டது. அந்தந்த நகராட்சி நிா்வாகத்தின் பராமரிப்பில் இருந்த இந்த பாலூட்டும் அறைகள், சில நாள்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. பின்னா், அவை பூட்டப்பட்டுவிட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
சாத்தூா் பேருந்து நிலையத்திலும் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட தாய்மாா்கள் பாலூட்டும் அறை தற்போது பூட்டிக் கிடக்கிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் தாய்மாா்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
இது குறித்து சமூகநல ஆா்வலா்கள் கூறுகையில், சாத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறையின் சாவி, சாத்தூா் போக்குவரத்துப் பணிமனை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அவா்கள் நினைத்த நேரத்தில் அறையை திறப்பதால், பெரும்பாலான நேரங்களில் மூடியே கிடக்கிறது. எனவே தாய்மாா்கள் நலன் கருதி, இந்த அறையை தினமும் திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் என்றனா்.