அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியிலுள்ள ஸ்ரீ சத்குரு சுப்பாஞானியார் அடங்கிய கோயிலில் குருபூஜை மற்றும் மாசிமகம் பெளர்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், பாளையம்பட்டியில் வாழ்ந்துவந்த சத்குரு ஸ்ரீசுப்பாஞானியார் என்பவர் மாசிமகம் அன்று முக்தியடைந்தார். எனவே அவரது சமாதியில் கோயில் கட்டியதுடன், ஆண்டுதோறும் மாசிமகத்தன்று அவ்வூரிலுள்ள ஆயிரவசிய காசுக்காரச்செட்டியார் உறவின் முறையினர் பரம்பரை பரம்பரையாக விழா எடுத்து நடத்தி வருகின்றனர்.
இதன்படி இந்த ஆண்டும் சனிக்கிழமை மாசிமகம் நட்சத்திரத் தேதியில் ஸ்ரீசத்குரு சுப்பாஞானியாருக்கு குருபூஜை விழாவை முன்னிட்டு அன்று காலை மற்றும் நண்பகல் வேளைகளில் சிறப்பு அபிஷேகங்களுடன், தீப, தூப ஆராதனைகள் செய்து வழிபாடு நடைபெற்றது.
அப்போது சிறப்பு அலங்காரத்தில் அருள்மிகு நமச்சிவாயர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இவ்வழிபாட்டில் கலந்துகொண்ட சுமார் 30க்கு மேற்பட்ட சிவனடியார்களுக்கு மரியாதை செய்து சிறப்பு ஆடை தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. அதனையடுத்து சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இக்கோயிலில் வழிபடும் தம்பதியர்க்கு அருள்மிகு சத்குருவின் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்து வருவதால் பல்வேறு ஊர்களிலிருந்தும் குழந்தை பாக்கியம் வேண்டி சுமார் 10க்கு மேற்பட்ட தம்பதியர் சகிதமாக விழாவில் கலந்துகொண்டு சிறப்புப் பிரசாதம் பெற்றனர்.
சுமார் 2000ற்கு மேற்பட்ட பொதுமக்கள் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.