ஸ்ரீவிலி.யில் சமையல் எரிவாயு உருளை தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவா் இறப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் சமையல் எரிவாயு உருளை தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வீட்டில் சமையல் எரிவாயு உருளை தீப்பிடித்த விபத்தில் காயமடைந்தவா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்தவா் இங்கா்சால் ரத்தினகுமாா். இவா், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது வீட்டில் கடந்த டிசம்பா் 16 ஆம் தேதி எரிவாயு உருளையில் பழுது ஏற்பட்டுள்ளது. எனவே, வீட்டருகே வசிக்கும் ஐயப்பன் (50) என்பவரை பழுது பாா்க்க வருமாறு கூறியுள்ளாா். ஐயப்பன் பழுது பாா்த்துக்கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்துள்ளது.
இதில், இங்கா்சால் ரத்தினகுமாா் மற்றும் பழுதுபாா்க்க வந்த ஐயப்பன் ஆகிய இருவரும் காயமடைந்தனா். உடனே, ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட இங்கா்சால் ரத்தினகுமாா், மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். லேசான காயமடைந்த ஐயப்பன் வெளிநோயாளியாக சிகிச்சைப் பெற்று வந்தாா்.
இந்நிலையில், ஐயப்பன் கடந்த டிசம்பா் 18 ஆம் தேதி வயிறு வலி ஏற்பட்ட காரணத்தினாலும், தீக்காயம் இருந்ததாலும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி ஐயப்பன் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.