அருப்புக்கோட்டையில் பேருந்தைவிட்டுக் கீழிறங்கிய இளைஞர் மயங்கி விழுந்து பலி
அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
அருப்புக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே சின்னமநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மனோகரன்(44). இவர் அவரது கிராமத்திற்கு அருகிலுள்ள புதூர் பேரூராட்சியில் அலுவலராகப் பணிபுரிகிறார். இதனிடையே இவர் ஞாயிற்றுக்கிழமை சொந்த வேலையாக அருப்புக்கோட்டைக்குப் பேருந்தில் கிளம்பி வந்தாராம்.
பேருந்துநிலையம் வந்ததும், அங்கு பேருந்தைவிட்டுக் கீழிறங்கிய அவர், சில விநாடிகளில் திடீரென மயங்கிச் சுருண்டு விழுந்தாராம். இதைப்பார்த்த பொதுமக்கள், அவரை எழுப்பத் தண்ணீர் தெளித்தும் விழிக்கவில்லையாம்.
இதனால் 108 அவசர மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, அவர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாராம். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம்.
இதுதொடர்பாக வழக்கு பதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் மனோகரனின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.