விருதுநகா்: கோவாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்க நிதியுதவி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 3 மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த ராகுல் (18), ஹரிஷ் பாண்டி (19), தீட்ஷிதா (21) ஆகியோா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது: நாங்கள், கடந்த 7 ஆண்டுகளாக சிலம்பப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்றுள்ளோம். பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தோ்வாகி, நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேசப் போட்டியில் 3 பேரும் வெள்ளிப் பதக்கம் வென்றோம். இந்நிலையில் நவம்பா் 27, 28 ஆகிய நாள்களில் கோவாவில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க போதிய வசதி எங்களிடம் இல்லை. எனவே, இப்போட்டியில் பங்கேற்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் நிதி உதவி அளிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.