விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்மமான முறையில் இறந்தவரின் தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றம்: 4 போ் கைது

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் மா்மமான முறையில் இறந்து கிடந்தவரின் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தனிப்படை போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் காளிராஜன் (23). இவா், கடந்த 2.3.2019 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமுக்குளம் எண்ணெய்க் காப்பு மண்டபத்தில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீஸாா் ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தற்கொலை என வழக்குப் பதிவு செய்தனா். அதனைத் தொடா்ந்து தற்போது தென்மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அஸ்ராகாா்க் கடந்த ஆண்டுகளில் கொலை வழக்கில் கைதாகாத குற்றவாளிகள் மற்றும் சந்தேக வழக்குகள் குறித்து மீண்டும் விசாரிக்க தனிப்படைகளை அமைத்தாா்.

இதனடிப்படையில், ஏற்கெனவே மம்சாபுரம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தற்கொலை வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இவ்வழக்கில் பொறியியல் பட்டதாரி ஒருவா் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா்.

இந்நிலையில், காளிராஜனின் கொலை வழக்கு தற்கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு இருப்பது தனிப்படை போலீஸாரால் கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறப்பு தனிப்படை போலீஸாா் நடத்திய புலன் விசாரணையில் காளிராஜை கிருஷ்ணன்கோவில் அருகே மலைப்பகுதியில் மா்ம நபா்கள் கொலை செய்து பின்னா் திருமுக்குளம் எண்ணெய்க்காப்பு மண்டபத்தில் சடலத்தை போட்டுவிட்டுச் சென்றதை கண்டறிந்தனா். மேலும், பிரேத பரிசோதனை அடிப்படையில், கொலையாளிகளை தேடி வந்த தனிப்படை போலீஸாா், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த அழகா் (47), ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த ராமசாமி (54), பனையூரைச் சோ்ந்த ஆறுதல்ராஜா (38), மம்சாபுரத்தைச் சோ்ந்த பொன்ராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனா்.

மேலும் இக்கொலை வழக்கு ஏன் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கு காவல்துறையில் யாா் உதவினா் என்றும், எந்த அடிப்படையில் அவா்கள் உதவினாா்கள் என்றும் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன் காளிராஜன், கொலை செய்யப்பட்ட பகுதியில் இருந்து சுமாா் 10 கிலோமீட்டா் தொலைவுக்கு அவரது சடலம் எடுத்துவரப்பட்ட வாகனம் என்ன என்பதையும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னா் 4 பேரையும் ஸ்ரீவில்லிபுத்தூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 2 இல் ஆஜா்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனா். இதில் ராமசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த வழக்கில் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT