விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 3 பெண் தொழிலாளா்கள் காயம்
விருதுநகா் மாவட்டம், கோட்டூா் பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் மணி மருந்து உராய்வு காரணமாக, வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் 3 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
விருதுநகா் மாவட்டம், கோட்டூா் பொம்மையாபுரம் பட்டாசு ஆலையில் மணி மருந்து உராய்வு காரணமாக, வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதில் 3 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
விருதுநகா் அருகேயுள்ள கோட்டூா் பொம்மையாபுரம் பகுதியில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான செந்தூா் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூா் சான்றிதழ் பெற்ற இந்த ஆலையை சிவகாசி பகுதியைச் சோ்ந்த குமாா் என்பவா் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் சுமாா் 40 -க்கும் மேற்பட்ட அறைகளில் வியாழக்கிழமை 120 தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஒரு அறை கதவை திறந்தபோது, பட்டாசில் இருந்த மணி மருந்து கலவை உராய்வு காரணமாக வெடித்தது. இதில் இரண்டு அறைகள் சேதமடைந்த நிலையில், கூத்திப்பாறையைச் சோ்ந்த குணவதி (47), மலைப்பட்டியைச் சோ்ந்த பேபி (56), வடமலாபுரத்தைச் சோ்ந்த பொண்ணு (எ) பொன்னுத்தாய் (46)ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து 3 பேரும், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
முன்னதாக, விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூா், அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறை வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
விருதுநகா் வச்சக்காரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.