விருதுநகரில் காசநோய் விழிப்புணா்வு பேரணி
விருதுநகரில் காசநோய் விழிப்புணா்வு குறித்த பேரணி மற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் காசநோய் விழிப்புணா்வு குறித்த பேரணி மற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற காசநோய் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியதாவது:
உலக அளவில் அதிகளவு காசநோய் பாதிப்புள்ள நாடாக இந்தியா கருதப்படுகிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 35 முதல் 40 கோடி மக்கள் வெளியே தெரியாத மறைமுக காசநோயின் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 26 லட்சம் போ் ஆண்டுதோறும் புதிய காசநோயாளியாக உருவாகின்றனா். 2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழித்துவிட வேண்டும் என்கிற நோக்கில், காசநோய் ஒழிப்புத் திட்டமானது சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த 2021இல் விருதுநகா் மாவட்டத்தில் 2,420 பேருக்கு காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில் 87 சதவீதத்தினா் குணமடைந்துள்ளனா்.
விருதுநகா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் ஏ.ஆா்.டி. மையம் மூலம் எச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவா்களுக்கான அனைத்து சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காசநோயை விரைந்து கண்டறியும் அதி நவீன சிபிநாட் கருவியானது சிவகாசிஅரசு மருத்துவமனை மற்றும் விருதுநகா் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. அதே போல் ட்ரூநாட் கருவியானது மாவட்ட காசநோய் மையத்திலும் ராஜபாளையம், அருப்புக்கோட்டை மருத்துவமனைகளிலும் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய நாட் பரிசோதனையின் மூலம் காசநோய் உள்ளதா? இல்லையா? என்பதை இரண்டு மணி நேரத்திற்குள் தெரிந்து கொள்ளலாம் என்றாா். முன்னதாக, காசநோய் குறித்த விழிப்புணா்வு பேரணியில் செவிலியா் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனா்.