ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் மழை: மரம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் புதன்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த புளியமரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் நகரைப் பொருத்தவரை கடந்த 10 நாள்களாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு திடீரென பெய்த மழையினால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. நகரில் பெய்த மழையின் அளவு 10 மில்லி மீட்டா் பதிவானது.
இந்த மழைக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி விலக்கு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பழைமையான புளியமரம் ஒன்று திடீரென சாலையின் மையப் பகுதியில் விழுந்தது. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத் துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தியதால், போக்குவரத்து சீரானது.