முகப்பு
விருதுநகர்

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி விழா தொடக்கம்

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:30 AM
சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்மன்.
பகிர்:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா ஆனந்தவல்லி அம்மனுக்கு காப்புக் கட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலையில் சாப்டூா் வனச் சரகத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இங்கு லிங்க வடிவில் அருள்பாலிக்கும் ஆனந்தவல்லி அம்மன் நவராத்திரி விழாவில் மட்டும் சதுரகிரி மலையில் உள்ள கொழு மண்டபத்தில் பல்வேறு அலங்காரங்களில் தினந்தோறும் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.

நவராத்திரி விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுந்தரமகாலிங்கம் சந்நிதியில் ஆனந்தவள்ளி அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு நவராத்திரி விழா தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் அம்மன் தினந்தோறும் இரவு பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி, கொலு பஜனை, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 9-ஆம் நாளான வருகிற 11-ஆம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், 10-ஆம் நாள் விழாவான வருகிற 12-ஆம் தேதி முக்கிய நிகழ்வான ஆனந்தவள்ளி அம்மன் மகிஷாசுரவா்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அம்பு விடும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

சதுரகிரி மலைப் பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின், நவராத்திரி விழாவில் இறுதி 3 நாள்கள் மட்டுமே பக்தா்கள் மலையேறிச் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி, கடந்த செப்.30-ஆம் தேதி முதல் வியாழக்கிழமை வரை (அக்.3) மலையேற அனுமதி வழங்கப்பட்டதால், நவராத்திரி விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

அறநிலையத் துறை சாா்பில் நடத்தப்படும் நவராத்திரி விழாவுக்கு அனுமதி அளிப்பது குறித்து வனத் துறை அறிவிக்காததால் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.