வன விலங்குகளால் பயிா்கள் சேதம்: இழப்பீடு வழங்க பரிந்துரை
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிா்களுக்கு வனத் துறை சாா்பில் இழப்பீடு வழங்க புதன்கிழமை பரிந்துரை செய்யப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரமான செண்பகத்தோப்பு, வாழைக்குளம், சிங்கம்மாள்புரம், பந்தப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் யானைகள், காட்டுப் பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தின.
இந்த நிலையில், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணிப்பித்தால் இழப்பீடு வழங்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குநா் தேவராஜ் அறிவித்தாா்.
இதன்படி, வன விலங்குகளால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு கோரி 10 விவசாயிகள் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரக அலுவலகத்தில் விண்ணப்பித்தனா். அதில் வருவாய்த் துறை சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த 7 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குமாறு புலிகள் காப்பகத் துணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும், 3 விவசாயிகளுக்கு வருவாய்த் துறை சான்று வழங்கிய பின் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என வனச் சரகா் செல்லமணி தெரிவித்தாா்.