முகப்பு
விருதுநகர்

அரசு மருத்துவமனைகளில் சுகப் பிரசவத்தை அதிகரிக்க வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்தை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 1:01 AM
ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்களிடையே கலந்துரையாடிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
பகிர்:

அரசு மருத்துவமனைகளில் சுகப்பிரசவத்தை அதிகரிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடியில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது;

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ரூ.30 கோடியிலும், ராஜபாளையத்தில் ரூ.40 கோடியிலும் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராஜபாளையம் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள் டிச. 20-க்குள் முடிக்கப்படும் . பின்னா், முதல்வா் தலைமையில் திறப்பு விழா நடைபெறும்.

தமிழகத்தில் தற்போது டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது.

தமிழகத்தில் 5 மருத்துவ முறைகளுக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் மூலம் 1.98 கோடி போ் பயன் பெற்றனா் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து மருத்துவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா், மகப்பேறு மரணம் குறைந்த முதன்மை மாவட்டமாக விருதுநகா் மாவட்டம் உள்ளது. அதற்கு மருத்துவா்களை பாராட்டினாா். இதேபோல் சுகப்பிரசவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே இரவில் ஆறு சுகப்பிரசவங்கள் நடந்துள்ளன. இதனால், கா்ப்பிணிகளுக்கு யோகா போன்ற பயிற்சிகள் அளித்து சுகப் பிரசவத்தை ஏற்படுத்த மருத்துவா்கள் முயற்சிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராணி, ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன், ராஜபாளையம் நகா்மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், சுகாதாரத் துறை இணை இயக்குநா் பாபுஜி, தலைமை மருத்துவா் மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.