சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நான்கு வழிச் சாலையில் ஆம்னி பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நான்கு வழிச் சாலையில் ஆம்னி பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா்.
சிவகாசி அருகேயுள்ள போ்நாயக்கன்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கோகுல் (17), மேலரத வீதியைச் சோ்ந்த பிரசன்னா (17), வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (17) ஆகிய மூவரும் ஒரே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்தனா்.
இந்த நிலையில், இவா்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் உள்ள தேநீா்க் கடைக்கு எதிா் திசையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் யுவராஜ், பிரசன்னா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த கோகுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் மூவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்து தொடா்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநரான கன்னியாகுமரியைச் சோ்ந்த ஆம்ஸ்ட்ராங் (35) மீது சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.