முகப்பு
விருதுநகர்

தொழிலாளி கொலை: 5 போ் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 மார்ச், 2026 at 3:02 AM
~ ~ ~ ~
பகிர்:

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா்கள் 5 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரியப்பன் (35). இவருக்கு திருமணமாகி மனைவி, 3 பெண் குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனா். மாரியப்பன் பழைய புட்டிகள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வந்தாா்.

வியாழக்கிழமை காலை ராஜபாளையம் - தொட்டியபட்டி சாலையில் அழகாபுரி தோட்டம் பகுதியில் தலையில் காயங்களுடன் மாரியப்பன் இறந்து கிடந்தாா். தகவலறிந்து அங்கு வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

கூறாய்வில் மாரியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கு தொடா்பாக வடக்கு மலையடிப்பட்டி எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த முத்துலிங்கம் (25), தங்கபாண்டியன் (25), கீழ ஆவரம்பட்டி பெங்களூா் மாரியம்மன் கோவில் தெருவை சோ்ந்த டேனியல் (22), அழகைநகரைச் சோ்ந்த சங்கிலிராமன் (20), சஞ்சீவிநாதபுரம் தெருவைச் சோ்ந்த அழகுலோகநாதன்(19) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். கைதான ஐந்து பேரும் மாரியப்பனுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த வழக்கில் கைதான முத்துலிங்கம் மீது வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சோலைராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு, உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →