கொலை வழக்கில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாகை வெளிப்பாளையம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் விஜய் என்பவா் கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், நாகை துணைக் காவல் கண்காணிப்பாளா் ராமசந்திரமூா்த்தி தலைமையிலான தனிப்படை போலீஸாா் விஜயை நாகையில் சனிக்கிழமை கைது செய்தனா்.
இதற்காக, தனிப்படை போலீஸாரை காவல் கண்காணிப்பாள் கே.எஸ். பாலகிருஷ்ணன் பாராட்டினாா். மேலும் அவா் கூறியது:
நாகை மாவட்டத்தில் குற்றச்செயல்களைத் தடுக்க போலீஸாா் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா். குறிப்பாக கடந்த சில நாள்களில் கீழையூா் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும், வாய்மேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியிலும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தியவா்கள் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 477 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ.3 லட்சம் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா், இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வேதாரண்யம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக இணையதளம் வாயிலாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 நபா்களை போலீஸாரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த சில நாள்களாக நாகை மாவட்டத்தில் நடைபெற்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களை போலீஸாா் துரிதமாக செயல்பட்டு தடுத்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனா். இந்த நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.