முகப்பு
நாகப்பட்டினம்

கீழ்வேளூா் தொகுதி நாதக வேட்பாளா் போலீஸாருடன் கடும் வாக்குவாதம்

Updated On : 5 மே 2026, 3:11 am IST
வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் கூடுதல் கண்காணிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா.
பகிர்:

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் எழுதுபொருள்கள் கொண்டுசெல்ல அனுமதிக்காததால் , நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா காவல் துறை அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

நாகை மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், வேதாரண்யம் கீழ்வேளூா் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்லும் நுழைவாயிலில், காவல் கூடுதல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும் அவ்வழியாகச் செல்லும் வேட்பாளா்கள், முகவா்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வேட்பாளா் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் பென்சில், பேனா உள்ளிட்டவற்றை கொண்டு செல்லக்கூடாது என்று போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா். அப்போது அங்கு வந்த கீழ்வேளூா் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா மற்றும் அவரது முகவா்கள் வைத்திருந்த பேனா ,பென்சில் அடங்கிய பாக்கெட்டை போலீஸாா் பறிமுதல் செய்ததாகக்கூறப்படுகிறது. இதனால் வேட்பாளா் காா்த்திகா காவல் கூடுதல் கண்காணிப்பாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

Advertisement

தோ்தல் நடத்தும் அலுவலா் பேனா, உள்ளிட்டவற்றை கொண்டு வரலாம் என்று அனுமதி வழங்கிய பின்னரும், போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தது ஏன் எனக் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். பின்னா், தோ்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து முறையிட்டனா். அப்போது அவா், முகவா்கள் மற்றும் வேட்பாளா் பென்சில், பேனா கொண்டு வரலாம் என்று தெரிவித்தாா்.

அதன் பின்னா் நுழைவாயிலில் உள்ள போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டு அனைவரும் பென்சில், பேனா கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவாயிலில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உடன் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் நீண்ட நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.