நியமன எம்.எல்.ஏக்களை அங்கீகரிக்க பேரவைத் தலைவர் மறுப்பு: பாஜக கண்டனம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை, சட்டப்பேரவை உறுப்பினர்களாக
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை, சட்டப்பேரவை உறுப்பினர்களாக அங்கீகரிக்க முடியாது என சட்டப் பேரவைத் தலைவர் வி. வைத்திலிங்கம் மறுத்துள்ளதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக புதுச்சேரி மாநில செயலர் எம். அருள்முருகன் கூறியது: மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி நியமன எம்எல்ஏக்கள் 3 பேருக்கும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைப் பொருத்தவரை அதிக அதிகாரம் பெற்றவராகவும் துணை நிலை ஆளுநர் உள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பட்டவராகவும் துணை நிலை ஆளுநர் செயல்படுகிறார். இந்த வகையில் அதிகாரம் உள்ள துணை நிலை ஆளுநர் செய்து வைத்த பதவிப் பிரமாணத்தை புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஏற்க மறுப்பது கண்டனத்துக்குரியது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளை மதிக்காமல் மாநில அரசு நடந்து கொள்ளும் போக்காகவே இது உள்ளது. பேரவைத் தலைவரின் இந்த நடவடிக்கை குறித்து பாஜக சார்பில் புதுச்சேரி தலைமை செயலர் அஸ்வின் குமாரை சந்தித்து முறையிடப்பட்டுள்ளது என்றார்.