காரைக்கால் கடலோரத்தில் இறந்த நிலையில் ஒதுங்கும் கடல் ஆமைகள்
காரைக்கால் கடலோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கடந்த 2 வாரங்களாக கரை ஒதுங்கி வருகின்றன. இறந்தவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் கடலோரத்தில் இறந்த நிலையில் கடல் ஆமைகள் கடந்த 2 வாரங்களாக கரை ஒதுங்கி வருகின்றன. இறந்தவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
காரைக்கால் கடற்கரையில் மக்கள் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தும் சுமார் 200 மீட்டர் நீளப் பகுதி அல்லாத மீனவர் குடியிருப்புப் பகுதி, அலையாத்திக் காடு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக கடல் ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கிக்கிடப்பதாக மீனவர்கள், அந்த பகுதிக்குச் செல்வோர் தெரிவித்தனர். சில ஆமைகள் உயிருடன் கரைக்கு வருவதைப் பார்க்கும் பள்ளி மாணவர்கள், கடலில் குளிக்க செல்வோர் சிலர், இதை தூக்கிக்கொண்டு மீண்டும் கடலுக்குள் விடுகின்றனர். இருந்தபோதிலும் இவை கடல் அலையில் மீண்டும் கரைக்கே திரும்பிவந்துவிடுகின்றன.
காரைக்கால் மாவட்டம், கருக்களாச்சேரி, அக்கரைவட்டத்துக்கு கிழக்கே, காரைக்கால்மேடுக்கு அருகே என அங்கொன்றும் இங்கொன்றுமாக 10 -க்கும் மேற்பட்ட ஆமைகள் திங்கள்கிழமை கரை ஒதுங்கிக் கிடந்தன. ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த ஆமைகள் என கூறப்படுகிறது.
பொதுவாக பருவமழை கால முடிவின்போது ஆமைகள் கரைக்கு வந்து, பள்ளம் தோண்டி முட்டையிடுவதும், அடிக்கடி வந்து அதை பார்த்துச் செல்லுமென கூறப்படுகிறது. இந்த வகையில், இவை கடற்கரைப் பகுதியில் வாழ்விடமாக கொள்ளும்போது, காரைக்கால் பகுதியில் விசைப்படகுகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால், படகின் கீழ் பகுதியில் அடிபட்டு ஆமை உயிரிழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
கடலோரத்தில் மீனவ கிராமங்கள், படகுகள் கட்டும் பகுதிகள் இருப்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாத கரைப் பகுதியிலேயே ஆமைகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடலோரத்தில், கடலோரக் காவல்நிலையத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபடும்போது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட அரசுத் துறையினருக்கு தெரிவித்து, இறந்த ஆமைகளை உடனடியாக அகற்ற வேண்டும். கடற்கரைப் பகுதி தூய்மையாக இருக்க வேண்டும் என எடுக்கப்படும் விழிப்புணர்வு நடவடிக்கையையொட்டி, இவ்வாறான செயல்பாடுகள் உடனுக்குடன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில்
வலியுறுத்தப்படுகிறது.