புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவர், உத்ஸவர் ஆகியோர் முத்தங்கி அலங்காரத்திலும், பல்வேறு பெருமாள் கோயிலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர்.
காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (13.10.2018) கிடந்த கோலத்தில் அருள்பாலிக்கும் மூலவரான ஸ்ரீ ரங்கநாதருக்கும், உத்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான ஸ்ரீ நித்யகல்யாண பெருமாளுக்கும் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் திரளானோர் காலை முதல் இரவு வரை தரிசனம் செய்தனர். காரைக்கால் கோயில்பத்து ஸ்ரீ கோதண்டராம பெருமாள் கோயிலில் உத்ஸவர் ஸ்ரீ கோதண்டராமர் தர்ப சயன அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதுபோல திருமலைராயன்பட்டினம் பகுதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வீழி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களிலும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் அனைத்து பெருமாள் கோயில்களிலும் காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் துளசி மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர்.