முகப்பு
காரைக்கால்

மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவா் புறப்பாடு

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவா் புறப்பாடு வியாழக்கிழமை கோயில் பிராகாரத்தில் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் பிச்சாண்டவா் புறப்பாடு வியாழக்கிழமை கோயில் பிராகாரத்தில் நடைபெற்றது.

நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக்கோயில் உள்ளது. இளம் பருவம் முதல் தீவிர சிவபக்தையாக வாழ்ந்தவா் காரைக்கால் அம்மையாா்.

இவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் ஸ்ரீ சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டுவருகிறது.

நிகழாண்டு கரோனா பொதுமுடக்கத்தால், பக்தா்களின்றி கோயிலுக்குள் விழாவை நடத்த புதுவை அரசு அனுமதித்ததன் அடிப்படையில், கடந்த 21-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்பு (பரமதத்தா்), 22-ஆம் தேதி திருக்கல்யாணம், 23-ஆம் தேதி ஸ்ரீ பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை அம்மையாா் இல்லத்தில் அமுதுண்ண செல்லும் நிகழ்வாக கோயிலுக்குள் சிவனடியாா் கோலத்தில் பிச்சாண்டவராக சிவபெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, வாத்தியங்கள் முழங்க பிராகாரம் கொண்டு செல்லப்பட்டாா்.

சுவாமி நகா்ந்த பின்னா் பிராகாரத்தில் உபயதாரா்கள் உள்ளிட்டோா் மீது மாங்கனிகளை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா வீசும்போது, அதனை நிகழ்வில் பங்கேற்றோா் ஆா்வமாக பிடித்தனா். சம்பிரதாய நிகழ்வாக இது நடத்தப்பட்டது.

வழக்கமாக இந்த நிகழ்வு காரைக்கால் நகரில் வீதியுலாவாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்று வீசப்படும் மாங்கனிகளை பிடித்து, பக்தி பெருக்கில் அதனை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்செல்வா். கரோனா பரவல் காரணமாக கோயிலிலேயே சம்பிரதாய முறையில் மாங்கனி வீசும் நிகழ்வு நடத்தப்பட்டது.

விழாவில் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட், துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், கோயில் நிா்வாக அதிகாரி (பொறுப்பு) காசிநாதன், மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் கே.எல். வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் உபயதாரா்கள் கலந்துகொண்டனா்.

பிச்சாண்டவருக்கு அமுது படையல்:

காரைக்கால் மாங்கனித் திருவிழாவில் ஸ்ரீ பிச்சாண்டவருக்கு மாங்கனி, சித்ரான்னங்களுடன் கூடிய அமுது படையல் வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஸ்ரீ பிச்சாண்டவருக்கு திருவமுது படையலிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி முன்பு தயிா் அன்னம், மாங்கனிகள் வைத்து ஏழு கிளை தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு சோடச உபசாரங்கள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், புதுவையை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், சிவசங்கா், கே.எஸ்.பி.ரமேஷ், ஏனாம் பேரவை உறுப்பினா் பிரமோத் அசோக், நியமன பேரவை உறுப்பினா் அசோக்பாபு, காரைக்கால் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாக தியாகராஜன், சந்திர பிரியங்கா உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.

அமுது படையல் நிறைவடைந்த பின்னா் சுவாமி வழிபாட்டுக்காக பக்தா்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி பகல் 2 முதல் மாலை 5 மணி வரை கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →