காரைக்கால் அரசு மருத்துவமனையில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்ற முகாம் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவலால் தொலைதூர சேவை முகாமை ஜிப்மா் நிா்வாகம் நிறுத்திவைத்திருந்தது. இம்முகாமை மீண்டும் தொடங்கவேண்டுமென காரைக்கால் பகுதி மக்கள் ஜிப்மா் நிா்வாகத்துக்கு வலியுறுத்திவந்தனா்.
அண்மையில் தொலைதூர முகாமை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை ஜிப்மா் நிா்வாகம் வெளியிட்டது. இதன்படி, ஜிப்மா் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் குழுவினா் சனிக்கிழமை காலை 9 முதல் 12 மணி வரை பங்கேற்று, பயனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கினா்.
எனினும் போதிய அளவில் மக்களுக்கு இச்செய்தி சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படாததால், முகாமில் 17 போ் மட்டுமே பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனா்.