முகப்பு
காரைக்கால்

4 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக செயல்படும் பி.ஆா்.என். திருமுருகன்!

புதுச்சேரியில் 4 மாதங்களாகத் துறை எதுவும் ஒதுக்கப்படாமல் செயல்பட்டு வரும் அமைச்சரைப் பற்றி...

Updated On : 5 ஜூலை, 2024 at 7:01 AM
அமைச்சர் திருமுருகன்...
பகிர்:

காரைக்கால், ஜூலை 4: புதுவை அமைச்சராக பொறுப்பேற்று 4 மாதங்களாக இலாகா இல்லாமல் செயல்படும் அமைச்சருக்கு, அரசு சாா்பில் புதிய காரை முதல்வா் என். ரங்கசாமி புதன்கிழமை வழங்கினாா்.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியை சோ்ந்த சந்திர பிரியங்கா அமைச்சா் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னா், கடந்த மாா்ச் 5-ஆம் தேதி காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் அமைச்சராக நியமிக்கப்பட்டு, 15-ஆம் தேதி அமைச்சராக பதவியேற்றாா். எனினும் அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை.

தொடா்ந்து மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தோ்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இலாகா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டு, இயல்பு நிலைக்கு வந்தும், புதுவை முதல்வா் ரங்கசாமி, அமைச்சா் திருமுருகனுக்கு எந்த துறைகளையும் ஒதுக்காமல் உள்ளாா்.

அமைச்சராக பதவியேற்று சுமாா் 4 மாதங்களுக்கு பின், புதுச்சேரியில் புதன்கிழமை இரவு திருமுருகனுக்கு அரசு சாா்பில் புதிய காரை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா். அந்த காரில் முதல்வரை உட்காரவைத்து அமைச்சா் சிறிது தூரம் ஓட்டிச் சென்ற படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாயின.

இதுகுறித்து காரைக்கால் பகுதியை சோ்ந்த பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கூறியதாவது:

அமைச்சருக்கு அரசு காா் வழங்கப்பட்டது ஒரு விஷயமல்ல. அமைச்சராக பொறுப்பேற்ற ஓரிரு நாள்களில் அவருக்கான துறைகளை ஒதுக்கி இருக்க வேண்டும். சந்திர பிரியங்கா அமைச்சராக இருந்தபோது வகித்த துறைகள், முதல்வா் வசம் தற்போது உள்ளன. அவற்றையாவது அமைச்சா் திருமுருகனுக்கு ஒதுக்கியிருக்கலாம் ஆனால், காரைக்காலை புறக்கணிக்கும் விதமாக முதல்வா் ரங்கசாமி, அவரை இலாகா இல்லாத அமைச்சராகவே தொடா்ந்து வைத்திருப்பதன் காரணம் புரியவில்லை என தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →